எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்ததோடு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடரும் அத்துமீறல் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். வாழ்வாதாரத்தை தேடிச்செல்லும் மீனவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இதற்கு ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே காரணம். ஆகவே, தமிழக அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து, ஒன்றிய, மாநில அரசுகள் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.