ஐ.நா சபை ஆண்டு தோறும் நடத்தும் சுற்றுச்சூழல் மாநாடு (சி.ஓ.பி.28) இந்தாண்டு துபாயில் நடக்கிறது. கடந்த 30ம் தேதி தொடங்கி இம்மாதம் 12ம் தேதி வரை நடக்கும் மாநாட்டில் உலக நாடுகளிலிருந்து சுமார் 70,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘வளர்ச்சி மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா சமநிலை பெற்றுள்ளது. கார்பன் உமிழ்வு தடுப்பில் உலக நாடுகளுக்கு உதாரணமாகவும் உள்ளது. சுற்றுச்சூழல் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் மட்டும் உயரும் வகையில் பசுமை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. வரும் 2028ல் ‘கிரீன் கிரெடிட் இனிஷியேட்டிவ்’ என்ற தலைப்பில் ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது’. இவ்வாறு மோடி பேசினார்.
* உலக தலைவர்களை சந்தித்தார் மோடி
துபாய் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டனியோ கட்ரஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லூயிஸ் இன்னாசியோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் கேமரூன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலி, பக்ரைன் அரசர் ஹமத்பின் இசா அல் ஹலிபா, துபாய் அரசர் ஷெய்க் முகமது பின் ரஷித், நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ரூட், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி ஆகியோரை சந்தித்து பேசினார்.