Saturday, June 29, 2024
Home » வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: திருமுடிவாக்கத்தில் குறுந்தொழிற்பேட்டை புதிதாக அமைக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: திருமுடிவாக்கத்தில் குறுந்தொழிற்பேட்டை புதிதாக அமைக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

by Karthik Yash

சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையின் மீது அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
* குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெறுவதை (ரூ.20 லட்சம் வரை) எளிதாக்கும் வகையில் தாய்கோ வங்கி அளிக்கும் கடனுக்கு தற்போது ஆண்டுக்கு 10 விழுக்காடு வட்டி விகிதம் என்ற அளவில் இருந்து 7 விழுக்காடு என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வகையில் கலைஞர் கடனுதவி திட்டம் ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும்.
* நீடித்த நிலையான பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்றம் அடையும் நேர்வு தொழிலாக வகைப்படுத்தப்பட்டு அந்நிறுவனங்களுக்கு 25% சிறப்பு முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தற்பொழுது வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், தொழில் தொடங்கவுள்ள மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படும். இதன் மூலம் அதிகப்படியான வேலையில்லா படித்த இளைஞர்கள் பயன்பெற இயலும்.
* கல்லூரி மாணவர்களை, தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கத்துடன் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 கோடி செலவில், துறையின் அனைத்து திட்டங்கள் குறித்த, திட்ட விளக்கக்கூட்டங்கள் நடத்தப்படும்.
* தோல் பதனிடும் தொழில் நிறுவனங்களுக்கு, மரபு சார்ந்த மரஉருளைகளை பாலிபுரொப்பைலீன் உருளைகளாக மாற்ற 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்கனவே தரச்சான்றிதழ் மானியம் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சர்வதேச தரச்சான்றிதழ்களை முதன்முறையாக புதுப்பிக்க செலுத்தும் கட்டணத்தில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
* சென்னை தொழிற் கூட்டுறவு பகுப்பாய்வு கூடம் லிட்டுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி நவீனப்படுத்தவும், என்ஏபிஎல் அங்கீகாரம் பெறவும் ரூ.43 லட்சம் செலவிடப்படும்.
* எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகள், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்த தொடர் பரிமாற்ற திட்டம் உருவாக்கப்படும்.
* நீலகிரி மாவட்டத்திலுள்ள தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும், நீலகிரி தேயிலை தூளினை விளம்பரப்படுத்தி விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
* சென்னை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் வேலூர் மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும். மேலும், மதுரை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மதுரை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம், திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய குறுந்தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
* திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கொத்தயத்தில் 53.50 ஏக்கரில் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.16.58 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
* தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், சங்கராப்பேரியில் 23 ஏக்கரில் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.6.51 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
* சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும்.
* கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.
* `புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான “தொழில் நயம்” என்ற நவீன வடிவமைப்பு உதவி மையம் ஸ்டார்ட் அப் டிஎன் சென்னை மெட்ரோ மையத்தில் நிறுவப்படும்.
* மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்க்கான புத்தொழில் நிதி வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
* தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவின் இரண்டாம் பதிப்பு இந்த நிதி ஆண்டில் மதுரையில் நடத்தப்படும்.
* 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு “பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” ரூ.4.11 கோடியில் விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.
* கண்டுபிடிப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமைகளை தாக்கல் செய்வதை ஆதரிக்க ரூ.1.40 கோடியில் ”தமிழ்நாடு அறிவுசார் சொத்து சேவை மையம் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தினை அடுத்த நிலைக்கு உயர்த்திடும் பொருட்டு ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

* கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்கலாம் என்று நினைக்கும் எதிர்க்கட்சி தலைவரின் திட்டம் மக்களிடம் எடுபடாது: அமைச்சர் எ.வ.வேலு பதில்
பேரவையில் நேற்று நடந்த காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா (பாபநாசம்) பேசியதாவது: கடந்த காலங்களில் சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கை மாற்றும் போது முன்பாகவே சி.பி.சி.ஐ.டி. வழக்கை முழுவதுமாக கண்டுபிடித்திருக்கும். ஆனால், சி.பி.ஐ விசாரணையில் வெளிவந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்றார்.

அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குறிக்கிட்டு பேசியதாவது: திருச்செங்கோட்டில் விஷ்ணுபிரியா என்கின்ற காவல்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி ஒரு பேட்டியில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சி.பி.ஐ மட்டும் நேர்மையான விசாரணை நடத்துவார்கள் என்ற கருத்து சரியானது அல்ல என தெரிவித்தார். சிபிஐ என்றால் தேவலோகத்தில் இருந்து வந்தவர்களா? அவர்கள் தவறே செய்ய மாட்டார்களா? தமிழ்நாடு போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

அவரை தெய்வமாக கோண்ட தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்து, ஜனநாயக கடமையை வெளியில் இருந்து செய்து வருகிறார். சி.பி.சி.ஐ.டி. உண்மையான விசாரணை மேற்கொள்வார்கள், யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். இதை அரசியலாக்கலாம் என்று நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் தமிழக மக்களிடம் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

3 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi