Monday, September 23, 2024
Home » ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் நாளை திறப்பு: தலைமை பொறியாளர் குழுவினர் ஆய்வு

ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் நாளை திறப்பு: தலைமை பொறியாளர் குழுவினர் ஆய்வு

by Neethimaan


கோவை: கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக 121 கோடி ரூபாய் செலவில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக 195 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்பாலமும் கட்டும் பணி நடந்தது. மொத்தமாக நில எடுப்பு பணிக்கு 152 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 481.95 கோடி ரூபாய் செலவில் இரு மேம்பால பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டு நாளை திறக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு 47 மற்றும் 60 டெக்ஸ் லாப் அமைக்கப்பட்டது. ஏறு, இறங்கு தள பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உக்கடம் ஏறு தளம் 150 மீட்டர் நீளம், 8.45 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு ஏறு தளம் 162 மீட்டர் நீளம், 8.20 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு இறங்கு தளம் 144 மீட்டர் நீளம், 7.58 மீட்டர் உயரத்திலும் பொள்ளாச்சி ரோடு இறங்கு தளம் 140 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டது. சுங்கம், வாலாங்குளம் ஏறு இறங்கு தளம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்த மேம்பாலம் நாளை திறக்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். மேம்பாலம் கட்டும் பணி காரணமாக உக்கடம் ஆத்துப்பாலம், கரும்புக்கடை, போத்தனூர் ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கனரக வாகனங்கள், புட்டு விக்கி ரோடு வழியாக சுமார் 3 கி.மீ தூரம் திருப்பி விடப்பட்டிருந்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல சுமார் 25 நிமிடங்களாகி வந்தது. மேம்பாலம் திறக்கப்பட்டால் 5 நிமிட நேரத்தில் 3.8 கி.மீ தூரத்தில் உள்ள மேம்பாலத்தை எளிதில் கடக்க முடியும். அனைத்து ரக வாகனங்களும் மேம்பாலத்தை எளிதாக பயன்படுத்த முடியும். கடந்த 6 ஆண்டாக நடந்து வந்த மேம்பால பணி முடிவு பெற்றதால் கோவை பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் வாகனங்கள் எந்த நெருக்கடியும் இன்றி விரைவாக சென்று வர முடியும்.

மேம்பால பணிகள் துவக்கப்படவுள்ள நிலையில் நேற்று தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்ய பிரகாஷ் ஆய்வு செய்தார். வாகனங்கள் உக்கடம் பஸ் ஸ்டாண்டிற்குள் ஏறி இறங்கும் பகுதி, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு ஏறி இறங்கும் பகுதி, செல்வபுரம் ரோடு பகுதியை ஆய்வு செய்த அவர் இந்த பகுதியில் வாகனங்கள் தாமதமின்றி செல்ல போதுமான இடவசதிகளை செய்து தர வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், சர்வீஸ் ரோடு சீரமைக்கப்பட்டு தடையின்றி வாகனங்கள் சென்று வருகிறதா?, மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டதா? எனவும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் ஞான மூர்த்தி, ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்கா மற்றும் லாரி பேட்டை, மீன் மார்க்கெட் சந்திப்பு பகுதியில் உள்ள வாகனங்கள் திரும்பும் இடம், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வாகனங்கள் செல்ல இந்த பகுதியில் கூடுதலான இட வசதி செய்து தரப்பட்டு தார் தளம் அமைக்கப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் திறக்கப்படுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

10 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi