தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை பந்தாடியது. ராங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் திணறிய யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனைகள் தீர்த்தா சதீஷ் 40 ரன் (36 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் ஈஷா ஓசா 16 ரன் மற்றும் குஷி ஷர்மா 12 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னின் அணிவகுத்தனர். வைஷ்ணவி மகேஷ் 5 ரன், இந்துஜா நந்தகுமார் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் சடியா இக்பால், நஷ்ரா சாந்து, டுபா ஹஸன் தலா 2 விக்கெட், நிடா தார் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. குல் பெரோஸா 62 ரன் (55 பந்து, 8 பவுண்டரி), முனீபா அலி 37 ரன்னுடன் (30 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குல் பெரோஸா சிறந்த வீராங்கனை
விருது பெற்றார்.