பெனோனி: தென்னாப்பிரிக்காவில் நடந்த U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கனவே 1988, 2002, 2010 ஆண்டுகளில் U19 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் நடைபெற்று வரும், ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமலே அவுட் ஆனார். மற்றொரு ஆட்டக்காரர் ஹாரி டிக்சன் மற்றும் கேப்டன் ஹக் வெய்ப்ஜென் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிக்சன் 42 ரன்களும், வெய்ப்ஜென் 48 ரன்களும் எடுத்தனர். இவர்களை அடுத்து விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும், சௌமி பாண்டே மற்றும் முஷீர் கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
254 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்குகளை இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பையை நழுவ விட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை அசத்தியுள்ளது. இந்திய அணி 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.