பாட்னா: ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்ததற்காக மாவட்ட கல்வி துறையால் அனுப்பப்பட்ட கடிதத்தில் எழுத்து பிழையால் கடிதத்தின் தன்மை மாறியது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. பீகாரின் ஜாமுய் மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி கல்வி துறை அதிகாரிகள் பள்ளிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல ஆசிரியர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்து இருந்ததாக தெரிகிறது. மேலும் பல ஆசிரியர்களின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இதற்காக அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தில் ஆசிரியர்களின் மோசமான செயல்பாடு (bad performance)என்பதை குறிக்கும் ஆங்கில வார்த்தையானது எழுத்து பிழையால் படுக்கையில் செயல்பாடு(bed) என தவறாக தட்டச்சு செய்யப்பட்டு இருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இதனை பார்த்த மாவட்ட கல்வி அதிகாரி, கடிதத்தில் தவறுதலாக எழுத்துபிழை ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.