ஆலங்குளம்: வக்கீல் உள்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நெட்டூரைச் சேர்ந்தவர் சின்னத்துரை (60). இவரது மகன் அசோக்ராஜ் (29). தென்காசி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். சின்னத்துரை குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தை பாண்டியன் குடும்பத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு உள்ளது. இந்நிலையில் குழந்தை பாண்டியனின் மகனும் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருபவருமான சுரேஷ் (27) என்பவர் விடுமுறையில் கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளார். அப்போது இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வக்கீல் அசோக்ராஜ் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த சுரேஷ் மற்றும் சிலர், அசோக்ராஜ், அவருடைய பெரியப்பா துரைராஜ் (63) ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் இறந்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தைபாண்டியன், மகாராஜன், குமார் (எ) முருகன், ராணுவ வீரர் சுரேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைபாண்டியன் மனைவி ஜக்கம்மாள், உறவினர் மைனர் பாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.