செங்கல்பட்டு: மண் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த வடகால் மதகு பகுதியில் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி சவுடு மண் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சவுடு மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.
இதனை தொடர்ந்து, சவுடு மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு பொக்லைன் வாகனம் மற்றும் ஒரு லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த சவுடு மண் கடத்தல் வழக்கில் தலை மறைவாக இருந்த அமுதா (50) மற்றும் சிவா (21) ஆகிய இருவரை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.