கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த, கிராமத்தை ஒட்டி கரும்பு, நெல், கிழங்கு, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தரை கிணற்றிலிருந்து விவசாய தேவைக்காக மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது வழக்கம். தற்போது, சில கிணற்றில் நீர் இல்லாத காரணத்தினால் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 9 மணி அளவில் இரண்டு காட்டு பன்றிகள் எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்தது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வந்தனர். பின்னர், இரண்டு மணிநேரம் போராடி இரண்டு காட்டுப்பன்றியையும் உயிருடன் மீட்டனர். இதனை தொடர்ந்து, மாதர்பாக்கம் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.