பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் நகரின் புஜாக்கியா பிர் பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர், அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் ரத்தத்தை சாலையில் வழிந்தோட விட்டதாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது எதிர்தரப்பை சேர்ந்த சிலர், தர்ணாவில் ஈடுபட்டவர்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இருதரப்புக்குமிடையே சண்டை மூண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலசோர் முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இன்று (ஜூன் 18) நள்ளிரவு வரை 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலசோர் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதற்றம் நீடிப்பதால், பாலசோர் முழுவதும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.