ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து வீஏஓ அலுவலகத்தில் லாரி புகுந்து விபத்து: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த லாரி, குண்ணம் வீஏஓ அலுவலகத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (50). கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் – சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது, குண்ணம் கிராம அருகே வந்தபோது ராஜ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோரம் இருந்த குண்ணம் வீஏஓ அலுவலக கட்டிடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் கட்டிடத்தில் சுவர் இடிந்து விழுந்தது. இந்த, இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் ராஜ்குமாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

மேலும், வீஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த, விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை