திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர், உரிய ஆவணங்களின்றி ஜப்பான் நாட்டு யென் மற்றும் யூரோ உள்ளிட்ட கரன்சிகள் கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து இந்திய ரூபாயில் ரூ.10,33,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதே போல் நேற்று ஏர்ஏசியா விமானத்தில் மலேசியா செல்ல தயாராக இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் கைப்பையில் 8ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு ரூ.6,85,580 என மதிப்பிடப்பட்டுள்ளது.