திருச்சி, புதுகை எஸ்பிகளுக்கு கொலை மிரட்டல் சீமான், சாட்டை துரைமுருகன் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு

திருச்சி: திருச்சி, புதுக்கோட்டை எஸ்பிகளுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட 2 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் மீது திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி எஸ்பி வருண்குமார், இவரது மனைவியான புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல்கள் விடுவிக்கும் வகையில் கடந்த சில தினங்களாக வீடியோ வைரலானது.

இதுதொடர்பாக திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்பி வருண்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, மிரட்டல் விடுத்த விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன்(48), உறுப்பினர் திருப்பதி (35) ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் 41 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில், கண்ணன், திருப்பதி ஆகியோர் போலீசாரிடம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், யூடியூபரான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் தூண்டுதலின்பேரில்தான் எஸ்பிக்களுக்கு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் மீது தில்லைநகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

குஜராத் வெள்ளம்: 26 தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை

சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!!