திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய 10ம் வகுப்பு மாணவனை தீயணைப்பு வீரர்கள் நேற்று சடலமாக மீட்டனர்.திருச்சி திருவானைக்காவல் மற்றும் நம்பர் 1 டோல்கேட் பகுதியை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த பாலத்தின் தூண்களை சுற்றிலும் மண் அரிப்பு ஏற்பட்டது. இந்த மண் அரிப்பை தடுக்கும் வகையில் பாலத்தில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் சிறிய அளவிலான தடுப்பணை நெடுஞ்சாலைத்துறையினரால் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் சமீப காலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இந்த தடுப்பணையில் திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டையை சேர்ந்த சாம்ரோஷன் (15) என்ற 10ம் வகுப்பு மாணவர் நண்பர்கள் 4 பேருடன் குளிக்கச் சென்றுள்ளார். குளித்துக்கொண்டிருக்கும் போது மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடன் சம்பவ இடம் விரைந்து வந்த ஸ்ரீ ரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் மிதவைகள் மூலம் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். உதவிக்கு திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

இரண்டு குழுக்களாக சேர்ந்து மாணவனை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இரவு 8.30 மணி வரையிலும் நடந்த தேடுதல் பணியில் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரத்தில் தேடுதல் பணியை தொடர முடியாததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை மாணவனை தேடும் பணி மீண்டும் தொடர்ந்தது. தேடுதல் பணி தொடங்கிய சிறிது நேரத்தில் 9.30 மணியளவில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவனின் சடலத்தை பார்த்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை இரங்கச்செய்தது.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி