Tuesday, September 17, 2024
Home » திருச்சி அருகே துணிகரம் மெக்கானிக் வீட்டில் 39பவுன் நகை 2கிலோ வெள்ளி கொள்ளை

திருச்சி அருகே துணிகரம் மெக்கானிக் வீட்டில் 39பவுன் நகை 2கிலோ வெள்ளி கொள்ளை

by Lakshmipathi

*பாத்திரத்தோடு சாப்பாட்டையும் எடுத்து சென்ற திருடர்கள்

சமயபுரம் : திருச்சி அருகே மெக்கானிக் வீட்டில் 39 பவுன் நகை, 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த மர்ம நபர்கள் பாத்திரத்தோடு சாப்பாட்டையும் எடுத்து சென்றனர்.
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த அகிலாண்டபுரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இளஞ்செழியன்(55). டிராக்டர் பழுதுபார்க்கும் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி சுகுணா(52). இவர்களுக்கு விவேக், விக்னேஷ் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் கீழ்தளத்தில் தனி அறையில் சுகுணாவும், மேல்தளத்தில் இளஞ்செழியன் மற்றும் அவரது மகன்களும் தூங்கினர்.

அப்போது நள்ளிரவு மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவில் கம்பியை விட்டு உள்தாழ்ப்பாளை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் தரை தளத்தில் இருந்த 2 பீரோக்களை உடைத்து, அதில் வைத்திருந்த 39 பவுன் நகை மற்றும் ₹20 ஆயிரம் ரொக்கம், பூஜை அறையில் உள்ள 2 கிலோ வெள்ளி, கோயிலுக்காக சேர்த்து வைத்திருந்த உண்டியலை திருடிய அவர்கள், சமையல் அறைக்குள் சென்று அங்கு பாத்திரத்துடன் இருந்த சாப்பாட்டையும் விட்டு வைக்காமல் எடுத்து சென்றது தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை இளஞ்செழியன் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோக்கள் திறந்து கிடந்தும், அதில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி ரகுபதிராஜா, மற்றும் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், பாத்திரத்துடன் எடுத்து சென்ற சாப்பாட்டை அருகில் உள்ள வயலில் உட்கார்ந்து உணவை சாப்பிட்டு ஹாயாக சென்றது தெரியவந்தது. மோப்பநாய் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

14 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi