திருச்சி அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணை படம் பிடித்து கிண்டல்: தம்பிக்கு அடி உதை, அண்ணன் கொலை

லால்குடி: திருச்சி அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்து கிண்டல் செய்த விவகாரத்தில் தம்பியை தாக்கியதை தட்டிக்கேட்ட அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கபிரியேல் புரத்தை சேர்ந்த ஸ்டீபன் சந்தானம் மகன் தாமஸ்எடிசன் (25). திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். லால்குடி அருகே மாந்துறையை சேர்ந்த 21 வயது இளம்பெண் திருச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒரே பஸ்சில் இரவு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இருவரும் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பஸ்சில் சென்றனர். பஸ்சில் இருந்த தாமஸ் எடிசன், அந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண், அவரது அண்ணன் குப்புசாமிக்கு (22) போனில் தெரிவித்தார். இதனையடுத்து குப்புசாமி, பைக்கில் 2 நண்பர்களுடன் கபிரியேல்புரம் பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பஸ்சிலிருந்து இறங்கிய தாமஸ்எடிசனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு பஸ்நிறுத்தம் அருகில் நின்றவர்கள் அந்த பகுதியில் திரண்டதால் தாமஸ் எடிசனை, பைக்கில் ஏற்றிக்கொண்டு மாந்துறை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகே சென்று மீண்டும் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்த தந்தை ஸ்டீபன் சந்தானம், அவரது மூத்த மகன் லூர்து ஜெயக்குமார் (27) ஆகியோர் அங்கு வந்து தாமஸ் எடிசனை மீட்கும் போது அவர்களையும் அந்த கும்பல் கட்டையால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த லூர்துஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண்ணின் அண்ணன் குப்புசாமியை நேற்று கைது செய்தனர். தலைமறைவான நண்பர்கள் மாந்துறை ராஜபாண்டியன் (24), சிவா (25) ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related posts

ஓசி சிகரெட் தராததால் டென்சன் கடையை சூறையாடிய ‘குடிமகன்கள்’

ஆந்திர சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 பேர் படுகாயம்

தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்