சென்னை: நாளையும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் பலமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைளை அரசிடம் முன்வைத்தும் போதிலும் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாத சூழலில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன், “போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் நாளையும் தொடரும். தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 50% வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. பேருந்துகள் அதிகமாக இயங்கியதாக தவறான விவரங்களை அரசு அறிவித்து வருகிறது” என்றார்.