திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 24 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு காஞ்சி மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் நகரமன்ற தலைவர் சுந்தர்ராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கி பேச வேண்டும்,
ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுக்காண வேண்டும், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுக்காண வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் அன்பழகன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.