போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கியது

*பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பு ஏதுமின்றி, வழக்கம் போல பஸ்கள் இயங்கின.
பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதில், அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

இப்போராட்டத்ைத கைவிடக்கோரி அரசு தரப்பில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, நேற்று திட்டமிட்டபடி போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டன. ஆனாலும், பொங்கல் பண்டிைக ெநருங்கும் நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, தடையின்றி பஸ்களை இயக்க தேவையான முயற்சிகளை அரசு போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டது. ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, தற்காலிக பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், பாதிப்பு ஏதுமின்றி வழக்கம் போல பஸ்கள் இயங்கின. தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கு சென்று, பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் மொத்தம் 560 பஸ்கள் உள்ளன. அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வழக்கம் போல இயங்கின. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட ஒருசில தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை.

ஆனாலும், அதை ஈடு செய்யும் வகையில், அரசு போக்குவரத்துக்கழகம் மாற்று ஏற்பாடுகளை செய்திருந்ததால், போக்குவரத்தில் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இது குறித்து, தொமுச பேரவை மாநில செயலாளர் சவுந்திரராஜன் கூறுகையில், ‘தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதி அளித்திருக்கிறது. நிச்சயம் படிப்படியாக கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை இயக்க ஒத்துழைக்கிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில், பாதிப்பு ஏதுமின்றி வழக்கம் போல அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அனைத்து பணிமனைகளிலும் தேவையான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். இந்த மாவட்டத்தை பொறுத்தவரை, வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

இந்நிலையில், பணிக்கு வரும் தொழிலாளர்களை யாரும் தடை செய்யாமல் இருப்பதற்காக, அனைத்து பணிமனைகளிலும், பஸ் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, வெளியூர் பயணங்களை பெரும்பாலான பொதுமக்கள் தவிர்த்ததால், பஸ்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

செய்யாறு: செய்யாறு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் மொத்தம் 59 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி, சி.பி.எம், பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்ச சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து பணிமனை முன்பாக பணிமனையிலிருந்து வெளியே வரும் பேருந்தை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ் மற்றும் ஆய்வாளர் ஜீவராஜ்மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். அதனையடுத்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றதும் பேருந்துகள் வழக்கம்போல பணிமனையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்று பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அரசு போக்குவரத்து பேருந்துகள் போளூர், சென்னை, வேலூர், விழுப்புரம், மருவத்தூர், சேலம், வந்தவாசி, பெங்களூர் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் இயங்கின. சேத்துப்பட்டு பணிமலையில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. பொதுமக்கள் எப்போதும் போல் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை.

கலசபாக்கம்: கலசபாக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பணியில் ஈடுபட்டனர்.
அதனால் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் தடை இல்லாமல் போக்குவரத்து இயக்கிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று காலை முதலே வழக்கம் போல் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து நகர்புறங்களுக்கு வேலைக்கு அரசு பஸ்களில் இலவச பஸ் சேவை திட்டத்தின் மூலம் மகிழ்ச்சியுடன் வழக்கம்போல் பெண்கள் பயணம் செய்தனர்.

அதேபோல் பணிகள் முடிந்து வழக்கம் போல் மாலை வீடு திரும்பினர். போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தால் கிராம பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரணி: ஆரணி அரசு போக்குவரத்து பணிமனையின் முன்பு நேற்று அதிகாலை சிஐடியு, ஏ ஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் குப்புரங்கன், தரணி உட்பட 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்கமாட்டோம் என பணியில் இருந்த டிரைவர்கள், நடத்துனர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குவந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் தொழிற் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் ஆரணி பணிமனையில் இருந்து 84 பஸ்களும் சென்னை, காஞ்சிபுரம், திருண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களிலும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால், பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

வந்தவாசி: வந்தவாசி அரசு பணிமனை 1 எதிரே சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் மண்டல பொருளாளர் முரளி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டாளி தொழிற்சங்க மண்டல பொருளாளர்காண்டீபன், அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மண்டல இணைச் செயலாளர் ஏழுமலை, செல்வம், பாட்டாளி தொழிற்சங்கம் பணிமனை தலைவர் செல்வம், பி எம் எஸ் தொழிற்சங்க பொறுப்பாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பரும் கலந்துகொண்டனர்.

Related posts

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது