வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் விபரீதம்: கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாப சாவு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே குடும்ப தகராறில், கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (31). கட்டிட தொழிலாளி. இவருக்கும் சந்திரபிள்ளைவலசு ஊராட்சி சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரது மகள் அபிராமிக்கும் (19) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அருள்முருகனுக்கும், அபிராமிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்த அபிராமி வீட்டின் அருகே உள்ள 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அருள்முருகன், அவரை காப்பாற்ற குதித்தார். கிணற்றில் தற்போது 10 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது.

தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், வாழப்பாடி போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 2 பேரின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்த நிலையில், காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி