வாடா… போடா… கைது செய்து பார்… போக்குவரத்து போலீஸ்காரருடன் காரை ஓட்டிவந்த வாலிபர் தகராறு: வீடியோ வைரலால் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு, நெற்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் தினமும் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு கோயம்பேட்டில் உள்ள மெட்டுகுளம் பகுதியில் கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆய்வாளர் வினோத்குமார், போலீஸ்காரர் அருள் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கார் படுவேகமாக தாறுமாறாக வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் அருள் பைக்கில் சென்று அந்த காரை சுற்றிவளைக்க முயன்றார். அப்போது காரை ஓட்டிச்சென்ற நபர், போலீசார் மீது மோதுவதுபோல் பயத்தை ஏற்படுத்திவிட்டு மேலும் படுவேகமாக இயக்கியுள்ளார். இருப்பினும் போக்குவரத்து போலீஸ்காரர் அருள், விடாமல் பைக்கில் விரட்டிச்சென்று நெற்குன்றம் சிக்னல் அருகே காரை சுற்றிவளைத்து பிடித்தார்.

இதன்பிறகு காரில் இருந்த நபரை கீழே இறங்கு என்று எச்சரித்துள்ளார். இதனால் காரில் இருந்த நபர் கடும் கோபத்துடன் இறங்கிவந்து போக்குவரத்து போலீசாரிடம், ‘’எனது காரை எப்படி நிறுத்துவாய்’’ என்று வாடா போடா என்று ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு போலீஸ்காரர் அருள், ‘’வாடா போடா என்று சொல்லக்கூடாது’’ என்று கேட்டபோது, ‘’ நான் அப்படித்தான்டா பேசுவேன்’’ என்று கடும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். அப்போது மேலும் போலீசை வரவைக்கிறேன் பார் என்று சொன்னபோது அந்த நபர் மேலும் அசிங்கமாக பேசியதுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

போலீஸ்காரர் கொடுத்த தகவல்படி, கோயம்பேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் தகராறு செய்த கார் டிரைவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(35) என்பதும் குடிபோதை காரணமாக அதிவேகமாக கார் ஓட்டிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்தனர். இந்த காரின் உரிமையாளர் தமிழ்செல்வம் என்பவரை அழைத்து காரின் உரிமத்தை வாங்கிக்கொண்டு பின்னர் காரை ஒப்படைத்தனர். இதனிடையே போக்குவரத்து போலீஸ்காரருடன் போதை ஆசாமி வாக்குவாதம் செய்வதுடன் ஆபாசமாக பேசும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்