ராமேஸ்வரம்: தலைமன்னார் மற்றும் பேசாளை கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினர் ரோந்து சென்றபோது கரையை ஒட்டிய கடலில் சாக்கு பைகள் மிதப்பதை கண்டறிந்தனர். 5 சாக்கு பைகளில் 94 பாக்கெட்டில் கேரளா கஞ்சா 188 கிலோ இருந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ7 கோடி. இதை கடத்தியவர்கள் யார் என்பது குறித்து தமிழக கியூ பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோல் இலங்கை புத்தளம் கடலோரப் பகுதியில் கடற்படையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முள்புதருக்குள் இருந்த பார்சலில் ரூ3லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 35,477 வலி நிவாரணி மாத்திரைகளை கைப்பற்றினர். இலங்கை மைக்குளம் கடலோரப் பகுதியில் பாறைகள் நிரம்பிய முள்புதருக்குள் இருந்த சாக்கு மூட்டைகளில் 843 கிலோ பீடி இலைகள், சில சாக்கு பைகளில் ரூ10 லட்சம் மதிப்பிலான 25 கிலோ அமோனியம் பை கார்பனேட் திரவப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.