பென்னாகரம்: வார விடுமுறையையொட்டி, ஒகேனக்கல் மற்றும் ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், படகு மற்றும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, காடு-மலைகளை கடந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. இதனால், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஒகேனக்கல்லுக்கு, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் வரத்து காணப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து தினசரி ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறையின்போதும் வெளியிடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை தினமான நேற்று, பக்கத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி சென்னை, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டைய மாநிலமான கர்நாடகத்திலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நண்பகல் வேளையில் சுமார் 10 ஆயிரம் பேர், ஒகேனக்கல்லில் குவிந்தனர். மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்தினருடன் நீராடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே காவிரியில் உல்லாச பரிசல் சவாரி செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். தொடர்ந்து மீன் உணவினை ருசித்து போக்கி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் நேற்று எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டது. அதேபோல், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரி பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், பொட்டானிக்கல் கார்டன், லேடிசீட், போன்ற இவர்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர். மேலும், படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து, குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர், அண்ணா பூங்காவில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள் சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிற டேலியா மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து, செல்பி எடுத்துக் கொண்டனர். நேற்று திரளான சுற்றுலா பயணிகள் வந்ததால், மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்காடு போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.