சென்னை: சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திடீர் சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது. பயணிகள் அல்லாத பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்தை கண்டு வியக்கின்றனர். பேருந்து முனையங்களில் இருந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பயணிப்பவர்களை அறிந்திருப்போம். ஆனால் ஒரு பேருந்து முனையமே சுற்றுலா தலமாக மாறி இருக்கிறது. ஆம்…சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தான் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க தொடங்கியுள்ளது.
88 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள பேருந்து முனையத்தில் குடிநீர், பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க நாற்காலிகள், கழிவறைகள், போன்களுக்கான சார்ஜ் பாய்ண்ட், உணவகங்கள், இலவச மருத்துவ சிகிச்சை முனையம், ஆவின் பாலகம் என அனைத்து வசதிகளும் உள்ளதால் பயணிகள் அல்லாதோரையும் ஈர்த்து வருகிறது கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.
பேருந்து முனைய வளாகத்திற்குள் 2 இடங்களில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களுக்கான பார்க்கிக் வசதி உள்ளதால் இது குடும்பங்களை ஈர்க்கும் இடமாகவும் மாறியிருக்கிறது. இந்த வசதிகளால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் ஒரு நவீன விமான நிலையம் போல காட்சியளிப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள், ஏடிஎம் மையங்கள் மற்றும் ஆட்டோ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.