சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டில் கிராமியச் சுற்றுலா மற்றும் வான்நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை ரூ.50லட்சம் செலவில் தயாரிக்கப்படும். ஊட்டி, குன்னூர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் பிற முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல்களை தரம் உயர்த்தும் பணிகள் ரூ.18.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாடு சுற்றுலாப் பயணச்சந்தை ரூ.1 கோடி செலவில் சென்னையில் நடத்தப்படும் என மொத்தம் 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.