சுற்றுலா மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு துறைகளின் நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சுற்றுலா மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு துறைகளின் நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் இன்று (9.7.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள “FORTS OF TAMIL NADU – A WALK – THROUGH” என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய நூல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இந்து குழுமமும் இணைந்து தயாரித்துள்ள நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள் மற்றும் பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை விளக்கிடும் வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய “Folk Deities of Tamil Nadu” என்ற ஆங்கில நூல்களை வெளியிட்டார்.

“FORTS OF TAMIL NADU – A WALK – THROUGH” நூல் வெளியீடு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, இந்து குழுமத்துடன் இணைந்து “FORTS OF TAMIL NADU – A WALK – THROUGH” என்ற நூலினை தயாரித்துள்ளது. சுற்றுலாத் துறையினர், இந்து குழுமத்தின் எழுத்தாளர்கள் மற்றும் சிறப்பு எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோட்டைகளின் கட்டடக்கலை, பாதுகாப்பு சிறப்புகள், படை வலிமை, மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வர்த்தகம், அக்காலத்தின் அரசியல் நிகழ்வுகள், அவற்றை கட்டி எழுப்பியவர்களின் விவரம் மற்றும் கோட்டைகளை கைப்பற்ற நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புகளை ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாக ஆவணப்படுத்தும் 228 பக்கங்களை கொண்டதாக இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்க பட்டினம் (சத்ராஸ்) கோட்டை, ஆலம்பரை கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை, கடலூர் மாவட்டம் செயின்ட் டேவிட் கோட்டை, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை, திண்டுக்கல் கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை, திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கோட்டை, நாமக்கல் கோட்டை, சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை ஆகிய 17 கோட்டைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோட்டைகள் குறித்து இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் பெரும்பகுதி இன்றைய கால புகைப்படங்களைக் கொண்டிருந்தாலும், சில காப்பகப் படங்கள் வாயிலாக கோட்டைகளின் கட்டடக்கலையையும், அமைப்பையும் விவரிக்கின்றது. மேலும், இந்நூலானது, இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் பற்றிய புரிதலை வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டார் தெய்வங்களைப் பற்றி விளக்கிடும் “Folk Deities of Tamil Nadu” நூல் வெளியீடு நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள், பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை கண்ணைக் கவரும் வண்ணப் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்து குழுமம் இணைந்து ஆங்கிலத்தில் “Folk Deities of Tamil Nadu” என்ற நூலினை தயாரித்துள்ளது.

நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளிலும் அவற்றின் தன்மைகளிலும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் பாரம்பரியமிக்க இத்தெய்வங்களையும் அவற்றின் வரலாற்றையும் மீட்டெடுக்க உதவும் காலப் பெட்டகமாக இந்நூல் திகழும். இந்நூலினை தமிழில் மொழியாக்கம் செய்யும் பணிகள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்து குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர்.கா.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர்.பி. சந்தரமோகன், இ.ஆ.ப., சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., தி இந்து குழுமத்தின் தலைவர் மற்றும் வெளியீட்டாளர். நிர்மலா லட்சுமணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழகஅரசே ஏற்று நடத்த வேண்டும்

கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் புதர்மண்டி கிடக்கும் பாசன வாய்க்கால்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம்!