சென்னை: நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிற்கு அம்பை அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக அம்பாசமுத்திர அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் கையில் எடுத்த விதம் தவறே தவிர காழ்ப்புணர்ச்சி காரணமாக பற்களை பிடுங்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அதிமுக எம்.எல்.ஏ.இசக்கி சுப்பையா கேட்டுக்கொண்டுள்ளார்.