டோனியின் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு திருமணம் ஆகி அன்பரசி என்ற மனைவியும் 10 வயதில் ஒரு மகனும், எட்டு வயதில் ஒரு மகனும், பிறந்து 10 நாள் ஆன பெண் குழந்தையும் உள்ளனர். கோபிகிருஷ்ணன் டோனியின் தீவிர ரசிகர் ஆவார். டோனிக்காக தனது சொந்த வீட்டையே சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிற வர்ணம் பூசியும், டோனியின் படங்களை வரைந்தும் வைத்துள்ளார். இந்நிலையில், பிசினசில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடமும் வாங்கிய கடனை இவர் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டு கோபிகிருஷ்ணனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மனைவியிடம் பணம் கொடுத்தவர்கள் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். பின் இருவரும் படுத்து தூங்கி விட்டனர். அதிகாலை 3.30 மணி அளவில் கோபிகிருஷ்ணனின் மனைவி எழுந்து பார்த்தபோது கணவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறை திறந்திருந்ததால் அங்கு சென்று பார்த்த போது கோபிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்