தக்காளிக்கு வந்த காலத்தால், இன்று பல விவசாயிகள் காட்டில் மழை பெய்து உள்ளது. சிலர் கோடீஸ்வரர்களாக மாறி உள்ளனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் ஒரு விவசாயி தக்காளி விற்ற பணத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் தாலுக்காவில் உள்ள லட்சுமிபூரை சேர்ந்தவர் கிருஷ்ணஷெட்டி. இவரது மகன்கள் ராஜேஷ் மற்றும் நாகேஷ். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய இவர்கள் பெற்றோருடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் கூடுதலாக 10 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து தக்காளி பயிரிட்டனர். இவர்கள் இதுவரை 2 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனை செய்துள்ளனர். முதல் இரண்டு அறுவடையில் 40 லட்சம் சம்பாதித்த நிலையில், இன்னும் 80 லட்சம் முதல் ஒன்றரை கோடி வரை வருமானத்தை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன், விவசாயி ராஜேஷ், முன்பு பெண் பார்க்கச் சென்றபோது, அவர் விவசாயி என்பதால் இளம்பெண்கள் அவரைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டனர். அரசு வேலையில் இருப்பவர்களுக்கே எங்கள் மகளைக் கொடுப்போம் என்று கூறி பெண்ணின் பெற்றோர் அவர்களை அவமானப்படுத்தினர். இந்த வார்த்தைகளைக் கேட்ட இளம் விவசாயி ராஜேஷ், அரசு ஊழியர்கள் மற்றும் ஐடி ஊழியர்களை விட விவசாயத்தில் நான் அதிகம் சம்பாதிப்பேன் என்று சவால் விடுத்து, தனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். ஆறு மாதத்தில் அறுவடை வந்தது. தற்போது தக்காளி விலை உயர்ந்து நல்ல விலைக்கு விற்று கோடீஸ்வரனாகி விட்டார். இப்போது தக்காளி பயிரிட்டதன் பலனாக புதிய மகேந்திரா எக்ஸ்யூவி 700 காரை வாங்கியுள்ளார். அந்த காரில் சென்று திருமணத்துக்கு பெண் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.