சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிக அளவில் இருந்து வருகிறது. தங்கத்தின் விலையில் அவ்வப்போது சிறிய அளவிலான தொகைகள் ஏற்றம், இறக்கம் இருந்து வரும். ஆனால் சமீபகாலமாகத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தங்கத்தின் விலைவரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.57,000க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.56,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.