சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4-க்கான போட்டித்தேர்வு சார்ந்த இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுகுறித்து அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குருப் 4-க்கான தகுதி தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தகுதி வாய்ந்த அனைவரும், தங்களிடமுள்ள திறன் செல்லிடைப்பேசி வாயிலாக இந்த இணைய வழி வகுப்புகள் மூலம் இலவசமாக பாடங்களை கற்று தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இந்த பயிற்சி வகுப்புகள் கடந்த 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டு AIM TN வலைதள பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சிறந்த பாட வல்லுனர்களை கொண்டும், பாடத் திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்தும், மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரலை மூலம் வினாத்தாள் குறித்த விவாதம் நடைபெறும். இதன்மூலம் மாணவ – மாணவிகள் தவறுகளை களையவும் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும் இயலும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வினை முனைப்புடன் எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் AIM TN என்ற யூடியுப் சேனலை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.