சென்னை: தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டி தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உணவும் தங்கும் வசதிகளும் இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும், மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.