டிஎன்பிஎஸ்சி குரூப் 1 விடைத்தாள் மாற்றம் முறைகேடு குறித்து 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: கீழமை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு விடைத்தாள் மாற்றி வைத்து முறைகேடு செய்தது தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த 2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை நடத்தியது. இந்த தேர்வினை எழுதிய ராம்குமார் தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளினை மாற்றி வைத்து முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியதாக அவரிடம் வேலை பார்த்த ஒருவர், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் சிலர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கினை ரத்து செய்ய கோரி கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், விடைத்தாள் மாற்றி வைத்த விவகாரத்தில் தான் ஈடுபடவில்லை என்றும் முறையாக விசாரணை நடத்தாமல் ராம்குமாரிடம் வேலை பார்த்த தன் மீது காவல்துறை தவறாக வழக்குப்பதிவு செய்திருப்பதால், இது தொடர்பான கீழமை நீதிமன்ற வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப் ஆஜராகி, கடந்த 2016ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வில் விடைத்தாள் மாற்றி வைத்து மோசடி செய்த வழக்கில் இதுவரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு அதில் 10 பேரிடம் விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்க கூடாது என்று வாதிட்டார். அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வில் விடைதாள் மாற்றி மோசடி செய்தது தொடர்பான வழக்கு விசாரணையை 6 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்