டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்

திருவள்ளூர்: டிஎன்பிஎஸ்சி போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் நாளை தொடங்கவுள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப் 2 ஏ தேர்விற்கு 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 19ம் தேதி ஆகும். குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய முதன்மை தேர்வுக்காகன இலவச பயிற்சி வகுப்புகள் நாளை காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன், இலவச மாதிரி தேர்வுகளும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9789714244, 8270865957 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகலுடன் இரு பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள புகைப்படங்களை இணைத்து திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை