இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர் அமுதவடிவு கூறுகையில், ‘பயிற்சி மருத்துவர் சிந்துவிற்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன் வயிற்றுப்போக்கு, வாந்தி இருந்துள்ளது. அவர் சுயமாகவே ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சலுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பரிசோதனைகளும் நெகட்டிவ் என்றுதான் வந்துள்ளது. ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் உள்ளிட்ட அனைத்து சோதனையும் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளுக்கு பின்னர் மருத்துவர் இறப்புக்கான காரணம் தெரியவரும். காய்ச்சலுக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி மருத்துவரை போல, தாங்களாவே சிகிச்சை எடுத்து கொள்ளாமல் பொதுமக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது உறவினர்கள், குழந்தைகள் என யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்’ என்றார்.
திருச்சியில் பெண் பலி: திருவானைக்காவல் நரியன்தெருவை சேர்ந்த ராஜசுகுமார் மனைவி கனகவல்லி (38). கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கனகவல்லி, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை எனவும், அவருடைய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததும் தெரியவந்தது என்றனர்.