திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 23 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான உத்தரவை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கவும், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, வாராந்திர சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த முகாமில், 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.வரிசையில் காத்திருந்து மனுக்களை அளிப்பதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, கலெக்டரின் உத்தரவுபடி அனைவருக்கும் இருக்கை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனாலும், கூட்டம் அதிகரித்ததால், காலை தொடங்கி மாலை 3 மணிவரை முகாம் நடந்தது.
மேலும், மாற்றுத்திறனாளின் கோரிக்கை மனுக்களை எழுதி கொடுக்கவும், அவற்றை சரியாக உள்ளதா என சரிபார்க்கவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர்.முகாமில், 483 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை, பஸ் பயண சலுகை அட்டை போன்ற ேகாரிக்கைகளுக்காக மனு அளித்தனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர், தகுதியுள்ள நபர்களுக்கு தாமதமின்றி உதவி உபகரணங்கள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விபரங்களை தபால் மூலம் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், 23 மாற்றுத்திறனாளி
களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான உத்தரவுகளை வழங்கினார்.
இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி, உறவினர்கள் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி திடீரென மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு காணும் நிலையில், இதுபோன்ற சட்ட விரோதமாக தீக்குளிக்க முயற்சிப்பது தவறானது என எச்சரித்து அனுப்பினர்.