Monday, July 8, 2024
Home » திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

by Lakshmipathi
Published: Last Updated on

*கலெக்டர் வழங்கினார்

*தாலுகா அளவில் முகாம் நடத்த நடவடிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில், 75 பேருக்கு தேசிய அடையாள அட்டையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கவும், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, வாராந்திர சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த முகாமில், 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.

மேலும், வரிசையில் காத்திருந்து மனுக்களை அளிப்பதில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், அனைவருக்கும் இருக்கை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார். அதோடு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை 12 பேருக்கு வழங்கப்பட்
டது.

அதேபோல், பஸ் பயண சலுகை அட்டை, ரயில் பயண சலுகை அட்டை, சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனு அளித்தவர்களுக்கு, விரைந்து நலத்திட்டங்கள் வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும், உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள மாற்றத்திறனாளிகளுக்கு, உரிய மருத்துவ பரிந்துரை அடிப்படையில் அவற்றை விரைந்து வழங்கவும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரும் மனுக்கள் மீது துறைசார்ந்த அதிகாரிகளின் கள ஆய்வு விசாரணை அறிக்கை அடிப்படையில் ஒரு மாதத்துக்குள் உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

அதோடு, முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, மதிய உணவு வழங்க கலெக்டர் ஏற்பாடு செய்தார். அதன்படி, உடனடியாக உணவு பொட்டலங்கள் வரவழைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருவதால், சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே, தாலுகா அளவில் சிறப்பு குறைதீர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்து, உடனுக்குடன் தீர்வு காண்பதன் நடைமுறை சாத்தியங்கள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். அதன்படி, விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.ஆய்வின்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi