*தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால், குளத்தில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயிலும், பவுர்ணமி கிரிவலமும் உலக புகழ்மிக்கதாகும். எனவே, ஆன்மிக நகரான திருவண்ணாமலையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள ஆன்மிக குளங்களை சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக, 7 குளங்களை சீரமைக்க ₹3 கோடி நிதி ஒதுக்கி கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுதவிர, தன்னார்வலர்கள் பங்களிப்புடனும் குளங்களை சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்த குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதையொட்டி, குளத்தில் உள்ள தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.
குளத்தில் இருந்து முற்றிலுமாக நீர் வெளியேற்றிய பிறகு, குளத்தின் அடியில் படிந்துள்ள சகதிகளை அகற்றி, தூர்வாரி கரைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக, கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அனைத்து புனித குளங்களையும் படிப்படியாக சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.