திருவள்ளூர்: திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கணவனின் கள்ளக்காதலி மீது பெட்ரோல் எடுத்து ஊற்றிய நிலையில், அருகில் இருந்த விளக்கில் இருந்து தீ பற்றி பெண்ணிற்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுரேஷ்(40). இவரது மனைவி பார்வதி(36). இவர்களுக்கு திருமணமாக 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் அதே மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை வைத்திருந்த 3 மகன்களுக்கு தாயான ராஜேஸ்வரி என்பவருடன் சுரேஷ் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷின் மனைவி பார்வதி, தனது கணவருடன் தகாத உறவில் உள்ள ராஜேஸ்வரியை காய்கறி கடைக்கு வரக்கூடாது என தகராறு செய்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து தற்போது ராஜேஸ்வரி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷின் மனைவி பார்வதி, ராஜேஸ்வரியிடம் தகறாறு செய்து கொண்டிருந்தார்.
அப்போது பார்வதி தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ராஜேஸ்வரியின் மீது ஊற்றியுள்ளார். அப்போது கடையில் ஏற்றி வைத்திருந்த விளக்கில் பட்டு, தீப்பற்றி எரிந்தது. அதில் ராஜேஸ்வரிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.