திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த மணவூர் ரயில் நிலையம் அருகே சங்கமித்ரா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஒரு மாதமாக திருட்டு சம்பவஙகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை மணலூர் காபூல் கண்டிகை பகுதியில் ஒருவர் வீடுகளை நோட்டமிட்டுக்கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபரை திருவாலங்காடு போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பதும், இவர் கடந்த சில நாட்களாகவே மணவூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. சிகிச்சைக்குப்பின் கோவிந்தராஜை போலீசார் சிறையில் அடைத்து விடுவார்கள். இந்நிலையில் தொடர்ச்சியாக நடக்கும் திருட்டு சம்பவங்களைத் தடுக்கக்கோரி திருவலாங்காடு காவல் நிலையம் அருகே பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.