திருத்தணி: திருத்தணி அருகே தனியார் கால்நடை தீவன கிடங்கில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தீவன பொருட்கள் எரிந்து நாசமானது. திருத்தணி, முருகப்பா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(47). இவர் அகூர் பகுதியில் சொந்தமாக கால்நடை தீவன கிடங்கு நடத்தி வருகிறார். இங்கு கால்நடைகள், மீன்கள் மற்றும் கோழிக்கான தீவனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலையில் வழக்கம் போல் கால்நடை தீவன கிடங்கில் வேலைபார்க்க தொழிலாளர்கள் வந்தனர். அப்போது கிடங்கில் இருந்து கரும்புகை வந்ததையடுத்து தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து திருத்தணி, பள்ளிப்பட்டில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
முதலில் கிடங்கில் இருந்து பிற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தீவன பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமான என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.