திருப்புவனம் சந்தையில் ரூ.2.25 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை: தீபாவளியையொட்டி களைகட்டியது சேல்ஸ்


திருப்புவனம்: தீபாவளி பண்டிகையையொட்டி திருப்புவனம் சந்தையில் ரூ.2.25 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடு, கோழி, சேவல்களை வாங்கிச் செல்வர். தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத், ஆடி உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் ஆடு, கோழி விற்பனை களைகட்டும். திருப்புவனம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை சந்தைக்கு வந்து விற்பனை செய்வர்.

சாதாரண நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள், கோழிகள் விற்பனையாகும். இந்நிலையில், வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நடந்த ஆட்டுச் சந்தை களைகட்டியது. ஆடு, கோழிகளை விற்க பொதுமக்களும், வாங்க வியாபாரிகளும் குவிந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனையாகின. சாதாரண நாட்களில் ரூ.7 ஆயிரத்துக்கு விற்ற 10 கிலோ ஆடு, இன்று ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. 1.5 கிலோ கோழி ரூ.300லிருந்து ரூ.400க்கு விற்பனையானது. சண்டை சேவல் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிகாலை தொடங்கிய சந்தை நண்பகல் வரை நீடித்தது. வியாபாரிகள் பெருமளவு குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று கூடிய சந்தையில் ஆடு, கோழிகள் ரூ.2.25 கோடிக்கு விற்பனையானது’ என்றனர்.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை