கோவை: திருப்பூரில் பிரிண்டிங் நிறுவன கட்டுமான சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்பூர்-கொங்கு மெயின் ரோட்டில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார் முத்துராஜா (40) இவருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிக்காக கோபிச்செட்டிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பிரவீன் ஆகியோரை வேலைக்கு வைத்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று அந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பகல் பொழுதில் ராமமூர்த்தி மீது அந்தக் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் , ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த பிரவீன் என்பவர் திருப்பூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.