Friday, September 20, 2024
Home » திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 நேரமும் குறைவில்லாத சத்தான உணவு

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 நேரமும் குறைவில்லாத சத்தான உணவு

by Lakshmipathi

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மூன்று நேரமும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் நகரமான திருப்பூரில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி உருவானதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அனைத்து வசதிகளுடன் செயல்பட தொடங்கியது.

இங்கு, அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய வகையில் தரம் உயர்த்தப்பட்ட பின்பு தினம் தோறும் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. தினமும் 2,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இதில் சராசரியாக 900 முதல் 1000 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சளி, காய்ச்சல், தலைவலி தொடங்கி கொரோனா, காசநோய், சர்க்கரை, டயாலிசிஸ், இருதயம் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.

தொடர்ந்து, திமுக அரசு பதவி ஏற்ற பிறகு அரசு மருத்துவமனைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தியது. குறிப்பாக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமலும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்தது. அதன் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உணவிற்கான பொருட்களை கொள்முதல் செய்வது முதல், நோயாளிகளுக்கு வழங்குவது அவர்களின் கருத்துக்களை கேட்பது என தனி அலுவலர்களை நியமித்து கண்காணிக்க தொடங்கியது. இச்செயல் தற்போது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் உணவகம் அமைக்கப்பட்டு தினந்தோறும் சத்தான உணவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பல தரப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஏற்றவாறு நோயாளிகள் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு தயார் செய்யப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்லாது கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவரவருக்கு ஏற்ற மாதிரி உணவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது.

தொடர்ந்து உதவி இருப்பிட அலுவலர் முன்னிலையில் அட்டவணை தயார் செய்யப்பட்டு செவிலியர்கள் கண்காணிப்பில் ஊழியர்கள் கையுறை, தலைக்கவசம், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து உணவு தயார் செய்கின்றனர். இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர் முருகேசன் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு தயார் செய்யப்படும் உணவுகள் நோயாளிகளுக்கு வழங்குவதற்கு முன்பாக, கல்லூரி முதல்வர் உட்பட துறை சார்ந்த மருத்துவர்கள் சோதனைக்கு பிறகு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ஸ்டாண்டர்ட் டயட், ஸ்டாண்டர்ட் டயட், ஹைட்ரோ கார்பன் டயட், குழந்தைகளுக்கான டயட் என அவர்களுக்கு ஏற்றவாறு உணவுகள் வழங்கப்படுகிறது.

அது மட்டுமல்லாது காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள் என அவர்களுக்கு ஏற்றவாறு பால் வழங்கப்படுகிறது. இதற்காக துணை இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணன் கண்காணிப்பில் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். பற்றாக்குறை இல்லாதவாறு சத்தான உணவுகள் வழங்குவதை தினந்தோறும் உறுதி செய்து வருகின்றோம்’’ என்றார்.

உணவே மருந்து

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் உண்ணும் உணவிலும் 50 சதவீத நோயை கட்டுப்படுத்தக்கூடிய வகையில், உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யக்கூடிய வகையிலான உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தினம்தோறும் உணவில் முட்டை, பழம் ஆகியவை சேர்த்து கொள்ளப்படுகிறது. தினம் ஒரு வகையான காய் என ஊட்டச்சத்து பெறுவதற்காக பொறியல் வழங்கப்படுகிறது. மேலும் காலை, மாலை வேளைகளில் பால், பிரட் மற்றும் சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. புரதம், கால்சியம் மற்றும் புரோ-பயாடிக் சத்துகளை பெற தினந்தோறும் உணவில் தயிர் வழங்கப்படுகிறது.

ஆதரவற்றோருக்கான மையம்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள் தினந்தோறும் 20 முதல் 25 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான தனிப்பிரிவு செயல்படுகிறது. அவர்களை குளிக்க வைத்து சுத்தப்படுத்தி அவர்கள் நோய்வாய்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கு உணவு அளித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பராமரித்து வருகிறோம். அவர்கள் குணமடைந்த பின்பு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை ஒப்படைக்கிறோம். யாரும் இல்லாதவர்களை ஆதரவற்றோர் காப்பகங்களில் ஒப்படைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi