Sunday, August 4, 2024
Home » திருப்பூரில் 4 இடங்களில் சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க வடமாநில தொழிலாளர்கள் விபரம் சேகரிப்பு

திருப்பூரில் 4 இடங்களில் சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க வடமாநில தொழிலாளர்கள் விபரம் சேகரிப்பு

by Lakshmipathi

*மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

திருப்பூர் : திருப்பூரில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள் அட்டை வழங்க தகவல் சேகரிப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயமும், காங்கயம் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த தொழில்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றார்கள். இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். மேலும் ரயில்வே நிலையங்களில் தினசரி இறங்கும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடம் மெட்டல் டிடெக்டர் உதவியோடு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னதாக அவிநாசி பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் குடும்பத்தோடு வருபவர்களை குறிவைத்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டார்கள். அவர்கள் யார்? என போலீசார் தேடியபோது அந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேருமே வடமாநிலத்தவர்கள்தான். மேலும் திருப்பூரில் ஈடுபடும் மோசடி சம்பவங்களை பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் அரங்கேற்றம் செய்கின்றனர்.

இப்படி குற்றச் சம்பவங்களில்ஈடுபட்ட பின் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் அவர்களிடம் முறையான ஆவணங்களை பெறுவதில்லை. இதனால் குற்றங்கள் நடைபெற்ற பின் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அடையாள அட்டை வழங்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில். திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டுமென தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நேற்று சட்ட பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட போலீஸ், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பு முகாம் நேற்று ஜெய்வாபாய், நஞ்சப்பா, கே.எஸ்.சி, பழனியம்மாள் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தொடங்கி வைத்து ஆய்வுமேற்கொண்டார். இந்த நிகழ்வில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ீகுமார், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன், நீதித்துறை நடுவர் 2 பழனிகுமார் ஆகியோர் முகாம்களை ஆய்வுமேற்கொண்டனர்.

இதில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வடமாநிலத்தவர்களின் விபரங்களை சேகரித்தனர். இதில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களோடு வந்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் உள்ள தொழில்கள் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும், வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பிலும் அடையாள அட்டை வழங்குவது அவசியமாகும். இதனை திருப்பூர் மக்கள் எதிர்ப்பாத்து வந்தனர். தற்போது நீதித்துறையின் முன் முயற்சியில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பது பாராட்டுக்குரியதாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi