திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு

சென்னை: நாவலூரில் சொத்து வாங்கி பதிவு செய்வதற்காக திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை அருகே கேளம்பாக்கத்தில் 20 ஏக்கர் தோட்டமும், பண்ணை வீடும் வைத்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இந்த பண்ணை வீட்டில் நடைபெறும் விவசாய பணிகளை பார்வையிட்டு ஓய்வெடுப்பது வழக்கம். இந்த தோட்டம் பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஓஎம்ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்ட ரஜினி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தனது நண்பர்கள் மூலம் நிலம் ேதடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில் தனியார் கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை வாங்க ரஜினி முடிவு செய்தார்.

பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று காலை திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அவர் வந்தார். இதனால் காலை 9 மணி முதல் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 9.45 மணிக்கு உள்ளே வந்த ரஜினியை பதிவுத்துறை செங்கல்பட்டு மண்டல டி.ஐ.ஜி ராஜ்குமார், மாவட்ட பதிவாளர் அறிவழகன், திருப்போரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) சக்திபிரகாஷ் வரவேற்றனர். இதையடுத்து, உள்ளே சென்ற ரஜினியை பதிவுத்துறை அலுவலர்கள் புகைப்படம் எடுத்து பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்தனர். மொத்தம் 6 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து 10.30 மணிக்கு ரஜினி புறப்பட்டு சென்றார்.ரஜினி வந்த தகவல் அறிந்ததும் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அவர்களை பார்த்து ரஜினி கையசைத்து சிலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு