திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்தவர் படுகாயம்: 12 மணி நேரமாக கிடந்த அவலம்

திருப்போரூர்: திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் புதிதாக மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட கால்வாய்க்குள் ஒருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை காப்பாற்ற யாருமின்றி 12 மணி நேரமாக கால்வாய்க்குள் தேங்கிய நீரில் கிடந்த அவலநிலை ஏற்பட்டது. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓஎம்ஆர் சாலையோரத்தில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிதாக மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பாதுகாப்பு வசதிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை.

இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓஎம்ஆர் சாலை பகுதியில் இன்று காலை 7 மணியளவில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு அரைகுறை நிலையில் கிடந்த மழைநீர் கால்வாயில் இருந்து ஒருவர் வலியுடன் முனகல் சத்தம் கேட்டது. அந்த கால்வாய் அருகே துப்புரவு பணியாளர்கள் சென்று பார்த்தபோது, அதற்குள் கிடந்த ஒருவர் தொடையின் ஒரு பகுதியில் இரும்பு கம்பி குத்தி, மறுபகுதியில் வெளியே வந்ததால் எழுந்திருக்க முடியாத நிலையில் கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அதில் இருந்த டாக்டர் ஷீலா தலைமையில் மருத்துவ ஊழியர்கள், கால்வாய்க்குள் கிடந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கால்வாய்க்குள் கிடந்தவர் குறித்து திருப்போரூர் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பதும், இவர் திருப்போரூர் அருகே மேட்டுத்தண்டலம், பாரதி நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட கூலிவேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் நேற்று மாலையே அரைகுறையாக உள்ள மழைநீர் தேங்கிய கால்வாய்க்குள் தவறி விழுந்துள்ளார். பின்னர் அதற்குள் இரும்பு கம்பி குத்திய நிலையில் படுகாயங்களுடன் 12 மணி நேரமாக மழையில் நனைந்தபடி உயிரை கையில் பிடித்தபடி கிடந்துள்ளார் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்