திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் புதிய சமையல் கூடம் திறக்கப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு படவட்டம்மன் கோயில் தெரு பகுதியில் இயங்கி வரும், அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. இதில், திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன், 15வது வார்டு கவுன்சிலர் பாரதி சமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய குழு தலைவருமான இதயவர்மன் புதிய சமையல் கூடத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில், பள்ளியின் தலைமையாசிரியர்கள், மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.