புதுடெல்லி: திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், சந்தையில் கிடைக்கும் நெய்யின் தரத்தை கண்காணிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாரம் தரமற்ற நெய் கொண்டு தயாரிக்கப்பட்டதாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கோயில்களின் புனிதத்ததையும் பிரசாதத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பண்டிகை காலத்திற்கு முன்பாக சந்தைகளில் கிடைக்கும் நெய்யின் தரத்தை கண்காணிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு நேற்று பதிலளித்த ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே, ‘‘தேசிய நுகர்வோர் உதவி மையம் மூலமாக உணவுப் பொருள் தொடர்பாக பெறப்படும் பொதுமக்களின் புகார் குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஆய்வு செய்யும். எனவே இது தொடர்பாக எப்எஸ்எஸ்ஏஐயின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை பெற்ற பின்னரே சந்தையில் நெய்யின் தரத்தை கண்காணிக்க கூடுதல் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
திருப்பதி லட்டு விவகாரம் நெய்யின் தரம் கண்காணிக்க கூடுதல் நடவடிக்கையா? ஒன்றிய அரசு பதில்
previous post